புவனேஸ்வர்,
ஒடிசாவில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் சிறையில் இருந்து 2 கொடூர கைதிகள் தப்பி சென்றுள்ளனர். பீகாரை சேர்ந்தவர்கள் ராஜா சஹானி மற்றும் சந்திரகாந்த் குமார். அவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் ஜஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.
அப்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடையில் இருந்த 2 பேர் பலியானார்கள். எனினும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக திரண்டு அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜனவரி 4-ந்தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிறையில் வார்டன்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அவர்கள் தசரா கொண்டாட்டத்திற்காக சென்று விட்டனர். இதனை அறிந்த அந்த 2 கைதிகளும், சிறை அறையின் கதவை உடைத்து வெளியேறி, சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்து, ஒடிசா சிறை துறை இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக சிறைக்கு சென்றனர்.
இதுபற்றி உள்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த காலங்களிலும் இந்த சிறையில், சிகிச்சையின்போது, விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் நடந்துள்ளன. சிலர் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்தும் உள்ளனர்.