கவுகாத்தி,
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்றுள்ள 36 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு செட்டிலும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய ஆட்டங்கள் இடம்பெறும். 45 புள்ளிகளை முதலில் எட்டும் அணி ஒரு செட்டை தனதாக்கும்.
இதில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதியது. கலக்கலாக ஆடிய இந்திய அணி 45-27, 45-21 என்ற நேர்செட்டில் இலங்கையை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. முதலாவது ஆட்டத்தில் நேபாளத்தை வென்று இருந்தது. இன்று நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை சந்திக்கிறது.