சென்னை: இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. பின்னர், மத்திய பிரதேசம் போலீஸார் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், முறையான அனுமதி இல்லாமல் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் மருந்தை ஏற்றுமதி செய்ய தடையற்ற சான்று வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை, காஞ்சிபுரத்தில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்படி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டுக்கு நேற்று காலை 2 வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல், மருந்து நிறுவனத்துக்கு தடையில்லா சான்று வழங்கியதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் திருவான்மியூர் பாலகிருஷ்ணா சாலையில் உள்ள தீபா ஜோசப், அண்ணாநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து உற்பத்தி ஆலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், குரோம்பேட்டை பார்வதிநகரில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, ஆவணங்களின் விவரங்கள் குறித்தும், மருந்து ஏற்றுமதியில் எத்தனை கோடி ரூபாய் முறைகேட்டில் அந்நிறுவனம் ஈடுபட்டது என்பது குறித்தும் தெரியவரும். இதனிடையே மத்தியப் பிரதேச போலீஸார் ரங்கராஜனை மருந்து ஆலைக்கு நேற்று அழைத்து வந்தனர். அமலாக்கத்துறை சோதனை நடந்து வந்ததால் தனியார் கட்டிடத்தில் வைத்து ரங்கராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.