புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 6-ந்தேதி வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரங்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு வந்தனர். அவற்றை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.
இதனை கவனித்த காவலாளிகள், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கோர்ட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டால் அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். இதனை தொடர்ந்து, ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்படுகிறது என பார் கவுன்சில் அறிவித்தது.
இந்த சம்பவம் குறித்து ராகேஷ் கிஷோர் அளித்த பேட்டியில், “கடந்த செப்டம்பர் 16-ந்தேதி தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், ‘சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கேலி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் கேலி செய்யாதீர்கள்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி. இருப்பினும், நான் வன்முறையை எதிர்க்கிறேன். ஆனால், அது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காக பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானாக எதுவும் செய்யவில்லை. கடவுள் என்னை அதனை செய்ய வைத்தார். கடவுள் சொல்லித்தான் செய்தேன். இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை” என்றார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது காலணி வீசிய விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என பார் கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த சாலிசிட்ட ஜெனரல் துஷார் மெஹ்தா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவித்தார். இதன்படி விரைவில் ராகேஷ் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.