ஊட்டி: 3வது நாளாக இரவில் கொட்டி தீர்க்கும் மழை – முடங்கும் போக்குவரத்து, மலை ரயில் சேவையும் ரத்து!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின்னல், இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

சீரமைப்பு பணிகள்

கனமழையின் காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக நேற்றிரவும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 137 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அத்துப்படியாக 103 மீல்லிமீட்டரும் பர்லியாறில் 92 மில்லிமீட்டரும்‌ பதிவாகியுள்ளது. கெத்தை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – மஞ்சூர் இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணிகள்

அதேபோல் குன்னூர் – கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.