அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.
தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக் கரையின் 56 படித்துறைகளில் நேற்று மாலை 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய், 55 லட்சம் பருத்தி திரிகள் பயன்படுத்தப்பட்டன. 33,000-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் விளக்குகளை ஏற்றி னர். ஒரே நேரத்தில் 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய உலக சாதனை ஆகும்.
சரயு நதியின் படித்துறைகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.
1,100 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற உருவங்களை மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
அயோத்தி ராமர் கோயிலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் வடம் பிடித்து இழுத்து ராமர், சீதை தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
9-ஆவது ஆண்டு தீப உற்சவம் கோலாகலம்: ராமகதா பூங்காவில் நடந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: கடந்த 2017 தீபாவளியின்போது அயோத்தியில் தீப உற்சவத்தை தொடங்கினோம். தற்போது 9-வது ஆண்டாக உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.
ராமரும், ராமர் பாலமும் கற்பனை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அவர்கள் கூறியதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கடந்த 1990-ல் கரசேவகர்கள் அயோத்தி நோக்கி பாத யாத்திரை சென்றபோது அப்போதைய சமாஜ்வாதி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால், நாம் அயோத்தியில் தீபங்களை ஏற்றுகிறோம். உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.