தீபாவளி விளக்குகள் குறித்து கருத்து: அகிலேஷ் யாதவை ‘அந்தோணி’ என்று விமர்சித்த பாஜக

லக்னோ: தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் செலவிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

அகிலேஷ் யாதவ் ஒரு கூட்டத்தில் பேசுகையில், “ராமரின் பெயரால் நான் ஒரு ஆலோசனையை வழங்குவேன். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸின் போது அனைத்து நகரங்களும் ஒளிர்கின்றன, அது பல மாதங்கள் தொடர்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு ஏன் பணத்தை செலவழித்து, அதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்?. இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?. அதை அகற்ற வேண்டும். இன்னும் அழகான விளக்குகள் இருப்பதை உறுதி செய்வோம் ” என்றார்.

தீபாவளியைக் கொண்டாட அயோத்தியில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்ற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாக அகிலேஷ் யாதவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

அகிலேஷின் கருத்துகளை விமர்சித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், “உ.பி.யின் முன்னாள் முதல்வர் தீபாவளி பண்டிகையின்போது கிறிஸ்துமஸை புகழ்ந்து பேசுகிறார். வரிசையாக ஒளிரும் விளக்குகள் அவரது இதயத்தை எரித்துவிட்டதால், 1 பில்லியன் இந்துக்களிடம் ‘விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு பணத்தை வீணாக்காதீர்கள், கிறிஸ்துமஸிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். அவர் இந்துக்களை விட கிறிஸ்தவர்களை அதிகமாக நேசிப்பதாகத் தெரிகிறது. அவர் பூர்வீக பண்டிகைகளை விட வெளிநாட்டு பண்டிகைகளை பெருமைப்படுத்துகிறார்” என்றார்

இதுகுறித்து விமர்சித்துள்ள மத்தியப் பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங், “அகிலேஷ் என்ற ஒருவர் எப்படி இப்படிச் சொல்ல முடியும்? அவரை அந்தோணி அல்லது அக்பர் என்று அழைப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். தீபாவளி வழிபாட்டையும் விளக்கு ஏற்றுவதையும் ஒருவரால் எப்படி எதிர்க்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அகிலேஷ் யாதவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் மதத்தை மாற்றியது போல் தெரிகிறது, இது விசாரிக்கப்பட வேண்டும்.” என்று சாரங் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.