இந்தியாவின் ஹாரிஸ் ராப் தான் ஹர்ஷித் ராணாவா? வச்சு செய்யும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே சொதப்பியதால், ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த போட்டியில் களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

போட்டியின் திருப்புமுனை

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகின. ரோஹித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், விராட் கோலி 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி, ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சொதப்பிய பந்துவீச்சு

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, அர்ஷ்தீப் சிங் தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால், ஆஸ்திரேலியா எளிதாக இலக்கை நோக்கி முன்னேறியது. குறிப்பாக, இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு மிக மோசமாக அமைந்தது. அவர் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரது பந்துவீச்சில் எந்தவித தாக்கமும் இல்லாததால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை குவித்தனர். இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 29 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது.

ரசிகர்களின் கடும் விமர்சனம்

இந்தப் படுதோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடே காரணம் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும், ஹர்ஷித் ராணாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். “இந்தியாவுக்கு இன்னொரு ஹரிஸ் ராஃப் கிடைத்துவிட்டார்” என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளருடன் ஒப்பிட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடனான நெருக்கம் காரணமாகவே அவருக்கு அணியில் இடம் கிடைத்ததாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரை வெல்ல வேண்டுமானால், இந்திய அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக, ஹர்ஷித் ராணா தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.