பெங்களூரு,
கர்நாடகாவின் தட்சண கன்னடாவில் புட்டூர் பகுதியில் அசோகா ஜனமன 2025 என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. புட்டூர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனால், அவரை காண திரளான மக்கள் கூடினர். இந்நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.
இந்நிலையில், 6 மணிநேரத்திற்கு மேலாக பலர் காத்திருந்தனர். இதில், ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. மொத்தம் 13 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 3 பெண்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.