பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவிடம் நிதி பெற்றது சட்டவிரோதம் என கூறிய நீதிபதிகள், சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்பளித்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சர்கோசி, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.
இந்நிலையில், பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் நிக்கோலஸ் சர்கோசி அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவி.” என தெரிவித்திருந்தார்.
நிகோலஸ் சர்கோசியின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதையும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் எதிர்த்துள்ளார்.
சிறைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த நிகோலஸ் சர்கோசி, தனது மனைவியின் கைகளைப் பிடித்தவாறு நடந்து வந்தார். அவர் பொது வீதிக்கு வந்த உடன் அவரை சூழ்ந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தனது மகன், மகள், பேரக்குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்த சர்கோசி, பின்னர் காரில் ஏறி சிறைக்குப் புறப்பட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோசி தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், மற்ற கைதிகள் அவரை நெருங்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். தனிமை வேதனையானதுதான் என்றாலும் அதனை எதிர்கொள்ள அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே சர்கோசியின் மேல் முறையீட்டு மனு மீதான உத்தரவை நீதிமன்றம் வழங்கும் என்றும் எப்படியும் இதற்கு இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.