கர்னூல்: ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து கர்னூல் அருகே விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் சிரி தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஏ. சிரி, “பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 41 பேர் இருந்தனர். பேருந்து பைக் மீது மோதியதை அடுத்து அந்த பைக் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீ பிடித்ததில் பேருந்து தீப்பிடித்துக்கொண்டது. இதில், பேருந்தில் இருந்த 41 பேரில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் இருந்து 11 இறந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 9 உடல்களை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்குள்ளாக நிகழ்ந்துள்ளது. பயணிகள் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு பேருந்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இரண்டு ஓட்டுநர்களும் தீ விபத்தில் இருந்து தப்பினர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. உதவி தேவைப்படுவோருக்காக நாங்கள் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
விபத்து குறித்துப் பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “தீ விபத்துக்குப் பிறகு கண்ணாடியை உடைக்க சுத்தியல்கள் எதுவும் பேருந்தில் இல்லை. பைக் மோதிய பிறகு பேருந்தின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடிக்கவில்லை. ஆனால், பேருந்து முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இது குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
விபத்து குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ஏற்பட்ட ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூரு கிராமத்துக்கு அருகில் ஹைதராபாத் – பெங்களூரு வழித்தடத்தில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்து குறித்து கவலையும் வேதனையும் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்னூல் மாவட்டத்தில் சின்ன தேகூர் கிராமத்துக்கு அருகே நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதகி்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திரப் பிரதேச அதிகாரிகளிடம் பேசி நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி மற்றும் பிற நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜோகுலாம்பா கட்வால் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
விபத்தின் பின்னணி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு வி காவேரி எனும் தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம், கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் மாவட்டம், 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனும் இடத்தில், இன்று (அக்.24) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது இந்த சொகுசு பேருந்து வேகமாக மோதியது.
இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த பைக் சிக்கி கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை ஓட்டியுள்ளார். இதில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. இதில், பேருந்தில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது.
அதிகாலை தூங்கி கொண்டிருந்த பயணிகளில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்துள்ளனர். மேல் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மற்றும் புகையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் இருந்த 20 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸில் கர்னூல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீட்டில் இருந்தபடியே பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். ஆதலால் எலும்பு கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுனரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.