புதுடெல்லி: தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை அமைக்க வேண்டும். நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது.” என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தய தீர்ப்பை நிறுத்திவைத்தது. மேலும், விளங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி மாநகராட்சி ஆகியவை தவிர மற்ற மாநிலங்கள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், இது வெளிநாடுகளின் பார்வையில் நமது நாடு குறித்து மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தனர்.
பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாத மாநில மற்றம் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அவ்வாறு ஆஜராகாவிட்டால் நீதிமன்றத்தை நாங்கள் ஆடிட்டோரியத்தில் நடத்துவோம் என கண்டிப்புடன் கூறினர்.