“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது.

திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் பங்கு கேட்காத காங்கிரஸ், இப்போது உரிமைக் குரலை உக்ரமாக எழுப்ப என்ன காரணம்?

இது காங்​கிரஸ் உயிர் வாழ்​வதற்​கும், உரிமைக்​கு​மான கோரிக்​கை. கூட்​ட​ணிக்​காக நாங்​கள் நிறையவே தியாகம் செய்​து​விட்​டோம். ஒரு கூட்​ட​ணி​யின் வெற்​றிக்​காகத்​தான் கூட்​டணி அமைக்​கி​றோம். வெற்றி பெறும் வரை நாங்​கள் அவர்​களோடு இருக்​கி​றோம். வெற்றி பெற்ற பிறகு அவர்​களும், நாங்​களும் வெவ்​வேறாக இருக்​கி​றோம். ஒரு காலத்​தில் 110 இடங்​களை பெற்ற நாங்​கள், இன்​றைக்கு 25 இடங்​களை கூட்​டணி மூல​மாக பெறுகி​றோம் என்​றால், இந்த கூட்​டணி தத்​து​வம் எங்​களுக்கு சரி​யாக வரவில்​லை. எனவே இப்​போ​தாவது இதை மாற்ற வேண்​டும் என்று கருதுகி​றோம்​.

அப்படியானால் திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களா?

இன்றைக்கு இருக்கின்ற கூட்டணிகளில் திமுக, அதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக எங்களுக்கு ஒரு சரியான தோழமை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த கோரிக்கையை வைக்கிறோம்.

காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை நெருக்கமாக இருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸாரின் நியாயமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் எதிர்வினை எப்படி இருக்கும்?

எங்களுடைய கட்சி தலைமை எங்களுடைய கருத்துகளைத்தான் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் வேண்டா வெறுப்பாக, சுயலாபத்துக்காக, தனிப்பட்ட விரோதங்களுக்காக இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. கட்சியின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்காக இதை சொல்லும்போது எங்களுடைய தலைமை இதை மறுதலிக்காது. எனக்கே ஒருமுறை அது போன்ற அனுபவம் ஏற்பட்ட போது நான் சொன்னதைக் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டது.

அது என்ன அனுபவம்… கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

​நான் மாநிலத் தலை​வ​ராக இருந்​த​போது, ஊரக உள்​ளாட்சி தேர்​தலில் காங்​கிரஸுக்கு 2 ஒன்​றி​யங்​கள் மட்​டும் ஒதுக்​கப்​பட்​டது. அப்​போது, ‘கூட்​டணி தர்​மத்தை திமுக மீறி​விட்​டது’ என்று அறிக்கை வெளி​யிட்​டேன். டெல்​லி​யில் இருந்து தமிழக பொறுப்பு செய​லா​ளர், என்னை தொலைபேசி​யில் அழைத்​து, அந்த அறிக்​கையை திரும்​பப்​பெற வலி​யுறுத்​தி​னார்.

நான் மறுத்​து​விட்​டேன். உடனே என்னை டெல்​லிக்கு அழைத்து அறிக்​கை​யில் கையெழுத்​திடச் சொன்​னார். அப்​போதும் மறுத்​து​விட்ட நான், “நான் சொல்​லி​யிருப்​பது உங்​களுக்கு சிரமத்தை ஏற்​படுத்​து​மா​னால், எனது பதவியை ராஜி​னாமா செய்​கிறேன். நீங்​கள் உங்​கள் விருப்​பம் போல் செய்​யுங்​கள்” என்​றேன்.

பிறகு சோனியா காந்​தியை சந்​தித்​து, காங்​கிரஸை விட வாக்கு சதவீதம் குறை​வாக வைத்​துள்ள பாமக​வுக்கு அதி​முக கூட்​ட​ணி​யில் 25 ஒன்​றி​யங்​களை கொடுக்​கிற​போது, நமக்கு திமுக கூட்​ட​ணி​யில் 2 ஒன்​றி​யங்​களை கொடுப்​பதை ஏற்க முடிய​வில்லை என்​பதை விளக்​கினேன்.

அதை ஏற்​றுக்​கொண்ட சோனி​யா​காந்​தி, “அழ​கிரி சொல்​வது சரி​தானே. பிறகு ஏன் அவரை சிரமப்​படுத்​துகிறீர்​கள்” என்று பொறுப்பு செய​லா​ளரிடம் தெரி​வித்​தார். தொடர்ந்​து, “நீங்​கள் அந்த மாநிலத்​தின் தலை​வர். உங்​களது கருத்து அது​தான் என்​றால், எங்​களு​டைய கருத்​தும் அதே​தான்” என்று சொல்லி என்னை மகிழ்ச்​சி​யுடன் அனுப்​பி​வைத்​தார்​.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் இருக்கிறதா?

இப்போது நடைபெறும் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சி. கொள்கை சார்ந்த ஒரு முதல்வர் இருக்கிறார், அவரை பலப்படுத்த வேண்டியது எங்களுடைய கடமை; எல்லோருடைய கடமையும் கூட. எனவே, ஆட்சி மாற்றம் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று.

நெடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

தாங்கள் எம்எல்ஏ, எம்பி-யாக வந்தால் போதும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் நினைத்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைத்துவிட முடியாது. காங்கிரஸ்காரன் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் அவரவர் உழைப்பு திறமைக்கு ஏற்ப அமைச்சர்களாக, எம்பி, எம்எல்ஏ-க்களாக வரவேண்டும் என்ற கருத்துடன் செயல்பட்டால் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர முடியும். இது முடியாத விஷயம் அல்ல. பெருந்தலைவர் காமராஜர் இதை செய்து காட்டியிருக்கிறார். எங்களாலும் முடியும். ஆனால், அதற்கான காலம் இன்னும் அமையவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.