பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ – பாராட்டிய துரை வைகோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் ‘பைசன்’ படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ, ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருந்தார்.

தற்போது மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என்ற படத்தை மதிமுக சார்பில் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.

துருவ் விக்ரம், மாரிசெல்வராஜ்
துருவ் விக்ரம், மாரிசெல்வராஜ்

மாரி செல்வராஜை நேரில் சந்தித்து மதிமுக துரை வைகோ, ‘இயக்குநர் திலகம்’ என குறிப்பிட்டு வைகோ எழுதிய பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து பேசிய துரை வைகோ, “நுட்பமான ஆயிரம் செய்திகளை, திகட்டாத காட்சிகள் மூலம் தன்னுடைய திரைமொழி மூலமாக அற்புதமான படைப்பை வழங்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இருவேறு சமூகத்தினரிடையே ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில், பின்தங்கிய கிராமத்தில் பிறந்து, பல கொடுமைகளை அனுபவித்து அர்ஜுனா விருதுவரை சென்றவரின் சாதனைக் கதையை வருங்கால இளைஞர்களுக்கு பாடமாக எடுத்துக்காட்டுகிறார் அன்புத் தம்பி மாரி செல்வராஜ்.

மாரிசெல்வராஜ், துரை வைகோ

சமூகத்தை பண்படுத்தும், நல்வழிப்படுத்தும் இதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்.

வைகோ அவர்கள் இப்படத்தை ரசித்துப் பார்த்து இரண்டு பக்கங்களுக்கு எழுதி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.