சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்களிடம், நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று கூறி இராக்குக்கு ஏஜெண்ட் ஒருவர் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் பஞ்சாப் பெண் ஒருவரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்ததாகத் தெரிகிறது. அங்கு சென்ற பின்னர் வீட்டு வேலை செய்யுமாறு அங்குள்ளவர்கள் நிர்பந்தம் செய்ததாகவும், வேலை செய்ய மறுத்தால் வீட்டின் உரிமையாளர் அடித்து, உதைத்தும் கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்நிலையில் பஞ்சாபிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பாப் பல்பிர் சிங் செச்சேவாலை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்புகொண்டு தன்னை மீட்குமாறு அந்தப் பெண் உதவி கோரினார்.
இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்ட பல்பிர், விவரங்களைத் தெரிவித்து பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இராக்கிலுள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் அந்தப் பெண் மீட்கப்பட்டு கடந்த மாதம் 28-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் பாப் பல்பிர் சிங்கை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மேலும் அந்த டிராவல் ஏஜெண்ட் மூலம் இராக் சென்ற 20 முதல் 25 பெண்கள் அங்கு சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.