சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில்அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் நாளை (நவ.2) மாலை 5.26 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படஉள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணிநேர கவுன்ட்-டவுன்இன்று மாலை 5.30 மணி அளவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிஎம்எஸ்-03 தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இது குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரம், அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதுவரை புவிவட்ட சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உட்பட பல்வேறுநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியக் கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் – விமானங்கள் இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தி பாதுகாப்பானதாக வழங்கும். ஒட்டுமொத்தத்தில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம். இது எல்விஎம்-3 ராக்கெட்டின்7-வது ஏவுதல் திட்டம் ஆகும். இதற்கு முன்பு சந்திரயான்-3விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் ஏவுதலை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.