பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை.
கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும்.
அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.

தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
