ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு வரும் 3 முக்கிய வீரர்கள்? காத்திருக்கும் அதிர்ச்சி!

ஐபிஎல் 2026 மெகா ஏலம் தொடர்பான செய்திகள் ரசிகர்களை ஆர்ச்சரியப்படுத்தி வருகிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான கடைசி நாளாக நவம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்து அணிகளும் தங்களது எதிர்கால திட்டங்களையும், உத்திகளையும் வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது தற்போதைய ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களை நம்புவதா என்ற கடினமான முடிவை ஒவ்வொரு அணியும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டு சில பெரிய, எதிர்பார்க்காத வீரர்கள் விடுவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

முகமது ஷமி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் முகமது ஷமி, இந்த முறை விடுவிக்கப்படலாம் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் 2025 ஏலத்தில், ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட ஷமி, அந்த தொடரில் மிகவும் ஏமாற்றமளித்தார். அவர் விளையாடிய 9 போட்டிகளில், வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும், அவரது எகானமி ரேட்டும் ஓவருக்கு 11.23 ஆக இருந்தது. இது டி20 போட்டிகளுக்கு மிகவும் அதிகம்.

35 வயதான ஷமியின் பந்துவீச்சில், பழைய வேகமும், கட்டுப்பாடும் குறைந்திருப்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ஹைதராபாத் அணி எஹ்சான் மலிங்கா மற்றும் சிமர்ஜீத் சிங் போன்ற இளம் பந்துவீச்சாளர்களையே அதிகம் நம்பியிருந்தது. எனவே ஷமியின் வயது, உடற்தகுதி மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரை விடுவித்து, தங்களது ஏலப் பர்ஸை வலுப்படுத்த சன்ரைசர்ஸ் அணி முடிவெடுக்கலாம். இருப்பினும் அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஏலத்தில் குறைந்த விலைக்கு அவரை மீண்டும் வாங்கவும் முயற்சி செய்யலாம்.

சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

இந்த முறை தக்கவைப்பு பட்டியலில் இருந்து, ஒரு மிக பெரிய அதிர்ச்சியை தரக்கூடிய பெயர் சஞ்சு சாம்சனுடையதாக இருக்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் கேப்டன் சஞ்சு சாம்சனின் பெயர், இந்த முறை விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 67 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 4200க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள சஞ்சு அந்த அணியின் ஒரு அசைக்க முடியாத தூணாக இருந்து வருகிறார்.

இருப்பினும், காயம் காரணமாக கடந்த சீசனில் 9 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியது மற்றும் அணியின் புதிய பயிற்சி ஊழியர்களுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் ஆகியவை இந்த உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தோனிக்கு பிறகு, ஒரு நீண்டகால விக்கெட் கீப்பர்-கேப்டனை தேடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனை குறிவைப்பதாக வரும் செய்திகள், அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் ஊகங்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

யுஸ்வேந்திர சஹால்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற மாபெரும் பெருமைக்குரிய யுஸ்வேந்திர சஹால். கடந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால், ரூ.18 கோடி என்ற மிக பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். ஆனால் தனது விலைக்கு ஏற்ற ஒரு ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சீசனில், 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரது எகானமி ரேட் 9.55 ஆக இருந்தது, இதுவே அவரது ஐபிஎல்லில் மிகவும் மோசமானதாகும். அவரது பந்துவீச்சில் பழைய கூர்மையும் குறைந்திருப்பதால், 30 வயதை கடந்த ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு இவ்வளவு பெரிய தொகையை மீண்டும் முதலீடு செய்யப் பஞ்சாப் அணி தயங்கலாம். இதனால் அவரை விடுவித்து, அந்த பணத்தை வைத்து, இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்க அந்த அணி திட்டமிடலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.