ஒட்டாவா,
கனடா எட்மண்டனில் வசித்து வந்தவர் ஆர்வி சிங் சாகூ (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் ஒரு ஓட்ட லுக்கு சாப்பிட சென்றார்.நள்ளிரவு அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவரது கார் மீது ஒருவர் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஆர்வி சிங் சாகூ அவரிடம் ஏன் என் காரில் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் நான் அப்படிதான் செய்வேன் என பதில் அளித்தார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆர்வி சிங்கை அந்த நபர் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது காதலி இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த ஆர்வி சிங் சாகூவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கொன்றதற்காக கைப் பாபின் (வயது 40) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான ஆர்வி சிங் சாகூ கனடாவில் தொழில் அதிபராக இருந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.