டொடோமா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 700 பேர் வரை உயிரிழந்ததாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்து உள்ளது.நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. பலியானோர் எண்ணிக்கையை வெளியிட பல ஆஸ்பத்திரிகள் மறுத்து உள்ளன. இதனால் உயிரிழப்பு குறித்த துல்லிய எண்ணிக்கை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.