SIR: “இதைத் தவிர வேறு வழியில்லை'' – அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? – முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதை விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பீகார் மாநில SIR வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டம்

அதே நேரத்தில், SIR வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த இடைக்காலத்தில் தேர்தல் ஆணையம் அவசரமாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கொண்டு வருவது ஏற்க முடியாதது.

நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த SIRக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்படுவதை இந்த அனைத்துக்கட்சிகள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பீகாரில் சிறுபான்மையினர் வாக்குகளையும், பா.ஜ.க-வின் எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்து நீக்கியதும், தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித்திட்டத்தோடு தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது.

ஆனால், இது தொடர்பான எந்தக் கேள்விக்கும் மக்கள் மன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை.

பீகாரில் நடந்த குளறுபடிகளை சரிசெய்யாமல், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு SIR திட்டத்தை செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 169-ன்படி மத்திய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) செய்யப்பட வேண்டும்.

அந்த முறையைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது.

இப்போது செய்யப்பட்டுள்ள SIR அறிவிப்பே சட்டவிரோதமானது. ஆதார் அட்டையை 12-வது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் குறித்து குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சரிபார்ப்பில் நேர்மையில்லை, வெளிப்படைத்தன்மையில்லை. அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்கள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

“ஆதார் சில நிபந்தனைகளுடன் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடாக உள்ளது.

அதே அறிவிப்பில் “No document is to be collected from electors during the Enumeration Phase” என்று கூறப்பட்டுள்ளதும், வாக்காளர்களைக் குழப்பும் விதமாகவே அமைந்துள்ளது. ஒரு பக்கம் “எந்த ஆவணங்களையும் வாங்கக் கூடாது” என்று கூறியுள்ளனர்.

மோடி - தேர்தல் ஆணையம்
மோடி – தேர்தல் ஆணையம்

அதே அறிவிப்பின் இணைப்பு-III-ல், “வாக்காளர் பிறந்த தேதிக்கு தொடர்புடைய ஆவணங்களை வாக்குப்பதிவு அதிகாரிக்கு (ERO) அவர் கேட்கும் போது கொடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எப்போது கேட்பார்கள்? தரப்படும் நோட்டீஸ் எந்தப் படிவத்தில் யார் தருவார்? எந்தப் படிவத்தில் ஆவணங்கள் தரப்பட வேண்டும்? ஆவணத்தைச் சமர்ப்பிக்க எத்தனை நாட்கள் வழங்கப்படும்? யாரிடம் தர வேண்டும்? – என்ற கேள்விகளுக்கு எந்த விடையும் இல்லை. இது தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் குழப்பத்தைக் காட்டுகிறது.

இப்படி குழப்பி, உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது என்றே தெரிகிறது.

ஒரு வாக்காளர் ஆவணம் வழங்க வேண்டுமா, வேண்டாமா, யாரிடம் வழங்க வேண்டும் என்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் உரிய பதில்களும் விளக்கங்களும் இல்லை.

இந்த குழப்பம் தகுதியான வாக்காளர்களை நீக்கவே பயன்படும். தேர்தல் ஆணையத்தின் அவசர நடவடிக்கையே நமக்கு அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டம்

Enumeration காலம் என நிச்சயிக்கப்பட்டுள்ள 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலான காலம், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமாகும்.

இந்த காலத்தில் கனமழையும் மோசமான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாகவும் விவசாயிகளாகவும் இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி திருப்பி அளிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்காது.

இந்த செயல்முறையின் மூலம் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற நியாயமான அச்சம் உள்ளது. வருவாய்த் துறையும் கனமழையால் உருவாகும் அவசர சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டியிருக்கும். எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்ததல்ல என்று இக்கூட்டம் கருதுகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பான காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் பொங்கல் திருநாளும் வருகின்றன.

இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ அல்லது சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகலாம் என்று இக்கூட்டம் தனது அச்சத்தைப் பதிவு செய்ய விரும்புகிறது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான அடித்தளமாகும்; அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

அரசியல் சட்டமும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் இதற்காகவே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரத்தை வழங்கி உள்ளன. தேர்தல் ஆணையம் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும், எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகாமல் சுதந்திரமான அமைப்பாக செயல்பட வேண்டும்.

தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமநிலையுடன் (Level Playing Field) போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மிக முக்கியமான பொறுப்பை அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.

ஆனால், பொறுப்புடன் நடக்க வேண்டிய தேர்தல் ஆணையமே, ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் சார்பாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை இக்கூட்டம் முன்வைக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள SIR வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தனது 27-10-2025 அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு எதிரானதுமான செயலாகும்.

எனவே, இந்த SIR ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஆகையால், இந்த SIR சீராய்வை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிடுமாறு அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் வழங்கி, 2026 தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் தேர்தல் ஆணையம் SIR-ஐ நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் இந்தக் கருத்துகளை ஏற்காத நிலையிலும், தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்குத் தவிர வேறு வழியில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.