ஹோபர்ட்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்களாக சாம்சன், குல்தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங் கூறியதாவது, நான் என்னுடைய வேலையை செய்து, திறன் மேலே நம்பிக்கை வைத்து, பயிற்சி எடுத்த திட்டங்களை செயல்படுத்துகிறேன். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது பங்காற்றுவதற்காக சிறப்பாக உணர்கிறேன்.
எதிரணி பேட்ஸ்மேன்கள் உங்களை அடித்து நொறுக்க வரும் போது கண்டிப்பாக விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அத்துடன் மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவர் பவுலிங் செய்தால் பேட்ஸ்மேன்கள் எனக்கு எதிராக அடிக்கடி ரிஸ்க் எடுப்பார்கள்.
அது எனக்கு விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. களத்தில் மகிழ்ச்சியுடன் என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன். பவர்பிளே, டெத் உட்பட சூழ்நிலை எதிராக இருந்தாலும் நான் பயிற்சி எடுத்த திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.