வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாத இறுதியில் ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. ஆனால், ஏவுகணை அணு ஆயுத வல்லமைபெற்றதல்ல என்று ரஷியா தெரிவித்தது.
இதனிடையே, ஆசிய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா திரும்பிய டிரம்ப் அணு ஆயுத சோதனை நடத்த அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் 33 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ரஷியாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இதுகுறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. நாம் வேறுபட்டவர்கள். வெளிப்படையான சமூகம். நாம் சோதனைகளை நடத்தப் போகிறோம் என வெளிப்படையாக கூறியுள்ளோம். மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தித்தான் வருகிறார்கள். வடகொரியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன’ என்றார்.