புதுடெல்லி,
பீகாரில் முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 122 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் என்று பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பீகாரில் இன்று ஜனநாயக கொண்டாட்டத்தின் முதல் கட்டம். இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.