புதுடெல்லி: இந்திய தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையத்தின் தலைவர் மொசோதோ மோப்யாவிடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 7.5 கோடி வாக்காளர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிய அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
உலகின் மிகவும் வெளிப்படையான மற்றும் திறன் வாய்ந்த தேர்தல் முறைகளில் ஒன்றை பற்றி அறிந்துகொள்ள தென்னாப்பிரிக்க எம்.பி.க்கள் விரைவில் இந்தியா வரவிரும்புவதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் இந்திய நாடாளுமன்றத்தை போல இரு அவைகளை கொண்டதாகும். தேசிய அவை, தேசிய மாகாண கவுன்சில் என்று அவை அழைக்கப்படுகின்றன.