India National Cricket Team: இந்திய அணிக்கு அடுத்த அனைத்து போட்டிகளும் உள்நாட்டிலேயே நடைபெற இருக்கின்றன. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா உடன் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் இந்திய அணி மோத உள்ளது. அடுத்து ஜனவரியில் நியூசிலாந்து அணியுடன் ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் இந்தியா மோத இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
Team India: அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் எப்போது?
அதன்பின், பிப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரும் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால், இனி அடுத்தாண்டு ஜூலை மாதம்தான் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20ஐ, ஓடிஐ தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தச் சூழலில், தற்போது உள்நாட்டு போட்டிகளும் தீவிரமடைந்துள்ளது. ரஞ்சி கோப்பை தொடரின் முதல்கட்ட போட்டிகள் வரும் நவ. 19ஆம் தேதியுடன் நிறைவடையும். இதுவரை நான்கு சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. 5வது சுற்று போட்டிகளுக்கு பிறகு ஜனவரியில் இரண்டாம் கட்டமாக ரஞ்சி கோப்பை தொடர் தொடங்கும்.
SMAT 2025-2026: சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்
வரும் நவ. 15ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தங்களின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட இருக்கிறது. வரும் டிச. 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் மினி ஏலமும் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே உள்நாட்டு டி20 தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 141 போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில், வரும் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி, டிச. 18ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு மினி ஏலத்தில் அதிக கவனம் கிடைக்கும் என்பதால், அத்தொடருக்கு வருடாவருடம் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும்.
Vijay Hazare 2025-2026: விஜய் ஹசாரே கோப்பை தொடர் எப்போது?
அந்த வகையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நிறைவடைந்த அடுத்த வாரமே, உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் தொடங்கும். மொத்தம் 136 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரும் டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. விஜய் ஹசாரே தொடரில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Rohit Sharma – Virat Kohli: உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம்
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தங்களின் உடற்தகுதியை நிரூபிக்க அவர்கள் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தேர்வுக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ஆடவர் அணி தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் இதுகுறித்து பொதுவெளியில் முன்னர் கூறுகையில், “வீரர்களுக்கு வேறு போட்டியில் இல்லாமல் இருந்தால் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்றார். இது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கும் பொருந்தும் என கூறப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடியிருந்த நிலையில், திடீரென ஜூலை மாதத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Rohit Sharma – Virat Kohli: விஜய் ஹசாரேவில் ரோஹித், விராட்?
ரோஹித், கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து வரும் டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஓடிஐ தொடரிலும் அவர் பங்கேற்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின்னர்தான் விஜய் ஹசாரே தொடர் தொடங்க இருக்கிறது. விஜய் ஹசாரே தொடர் நடைபெறும்போதே ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடர் தொடங்கும். எனவே, விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் தொடக்கக் கட்ட போட்டிகளில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Rohit Sharma – Virat Kohli: இருவருக்கும் பிசிசிஐ கூறியது என்ன?
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக The Indian Express ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய அணியில் விளையாட விரும்பினால், உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ-யும், அணி நிர்வாகமும் இருவருக்கும் (ரோஹித், விராட்) தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் இரண்டு பார்மட்களிலும் ஓய்வு பெற்றுவிட்டதால், போட்டிக்கு ஏற்றவாறு உடற்தகுதியுடன் இருக்க அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Rohit Sharma – Virat Kohli: ரோஹித், விராட் கோலி நிலவரம் என்ன?
இந்நிலையில், ரோஹித் சர்மா மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தனக்கு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடுவதில் விருப்பம் உள்ளது என தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், விராட் கோலி விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரை பொருத்தவரை மூன்று போட்டிகளில் ரோஹித் சர்மா 8, 73, 121 ரன்களையும், விராட் கோலி 0, 0, 74 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் எதற்கு? அதான் இந்த வீரர் இருக்காரே.. CSK அணி தவறு செய்கிறதா?
மேலும் படிக்க | அஜித் அகர்கர் இடத்தில் நான் இருந்திருந்தால்.. முகமது ஷமி நீக்கம் குறித்து கங்குலி!
மேலும் படிக்க | இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: பிளேயிங் 11 இதுதான்.. துருவ் ஜுரேல் இருக்காரா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More