நெற்பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, “தமிழக அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்த முடிவால் முந்தைய காலக்கெடுவை தவறவிட்ட விவசாயிகளுக்கும் பயன்பெற முடியும். சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதி 2025, நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்போது முழு வீச்சில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 6.27 இலட்சம் விவசாயிகள் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். இது மொத்த சாகுபடி பரப்பளவில் 57 சதவிகிதமாகும்.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டது. முதலில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் காப்பீட்டின் கடைசி தேதி 2025 நவம்பர் 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்ததால் காப்பீட்டு விண்ணப்பங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் முயற்சியின் பேரில், சம்பா/தாளடி/பிசானம் நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதி ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக, விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு, வேளாண்மைத் துறை அலுவலர்கள் தங்களின் பகுதிகளில் விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்யும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயிகள், தேவையான ஆவணங்களுடன் நவம்பர் 30-ம் தேதிக்குள் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.