பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேபோல் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். வேளாண் அமைச்சர் பிரேம்குமார், கயா தொகுதியிலிருந்து 8-வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் ராஜு குமார் சிங், சாஹேப்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல் அமைச்சர் சஞ்சய் சரோகி, நிதின் நபின், ரேணு தேவி(பேட்டையா தொகுதி), நிதிஷ் மிஸ்ரா (ஜான்ஜர்பூர்), நீரஜ் குமார் சிங் பப்லு (சட்டாபூர்) உட்பட 24 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.