அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SR) மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (திங்கள்) வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வருடாந்திர சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் இடைப்பட்ட நடைமுறையே சிறப்பு திருத்தம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ஒரு வகையில் இது சிறப்பு சுருக்க திருத்தத்தை மேம்படுத்தும் நடைமுறை. சிறப்பு தீவிர திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு படிவங்களுக்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள பதிட்டில் உள்ளபடி வாக்காளர்கள் இருக்கிறார்களா என்பதை பிஎல்ஓக்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பார்கள்” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

“வரும் 22ம் தேதி முதல் டிச. 20ம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் வீடு வீடாகச் செல்வார்கள். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 27ம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப். 10ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளைக் களைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகுதியுள்ள குடிமக்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்களின் பெயர்கள் களையப்படுவதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். ஒரே பெயர் பல இடங்களில் பதிவாகி உள்ளதா, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா, நிரந்தரமாக வெளியேறிவிட்ட வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதை பிஎல்ஓக்கள் சரிபார்ப்பார்கள்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.