டாக்கா: வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார்.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.