சென்னை: இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களுக்கு பிறகு பரஸ்பர விவாகரத்து கோரி அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது,கணவன் இந்து என்றும், மனைவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், எனவே பரஸ்பர விவாகரத்து வழங்க முடியாது என்றும் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து கணவன், மனைவி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனைவி பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், அவர் இந்து முறைப்படிதான் வாழ்ந்து வந்துள்ளதாகவும், இருவரும் இந்து முறைப்படி இந்து கோயிலில் திருமணம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை அம்பத்தூர் நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகும் குடும்ப நல நீதிமன்றம் இதை ஏற்க மறுத்தது தவறானது. இந்து முறைப்படி அனைத்து சடங்குகளும் நடந்துதான் இருவருக்கும் திருமணம் நடந்தள்ளது. மனைவியும் இந்துவாக வாழ்க்கை நடத்தியுள்ளார். எனவே, மனைவி முஸ்லிம் என்று காரணம் கூறி விவாகரத்து மனுவை ஏற்க மறுத்தது தவறானது என தீர்ப்பளித்துள்ளார். எனவே கணவன்,மனைவியின் விவாகரத்து மனுவை மீண்டும் அம்பத்தூர் நல குடும்ப நீதிமன்றம் விசாரித்து, 4 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.