அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIAவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்ற அதிகாரி இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலத்தை ஒப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்கக் கூறி பாகிஸ்தானிலிருந்து அவருக்கு கடிதம் வந்ததையும் அந்த சூழலை அவர் சுலபமாக கையாண்டதையும் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற மெயிலை அனுப்பியுள்ளது. அதற்கு ‘உங்கள் கடிதத்தை நான் கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்’ என பதிலனுப்பியுள்ளார் கிரியாகோ. அதன்பின்னர் பாகிஸ்தானிலிருந்து எந்த பதிலும் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

CIAவில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் கிரியாகோ, ஒரு ஆய்வாளராகவும், 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதல் அதைத் தொடர்ந்த இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னிட்ட, இந்தியா பாகிஸ்தான் இடையிலான 4 நாள் மோதலுக்குப் பிறகு, வழக்கமான போர் ஏற்பட்டால் இந்தியா பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்திவிடும் எனக் கூறினார் கிரியாகோ. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் நடந்தால், அவர்களுக்கு எதுவும் நல்ல விளைவுகளைத் தரப்போவதில்லை. ஏனெனில் பாகிஸ்தானியர்கள் தோல்வியடைவார்கள். அது அவ்வளவுதான். அவர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றி பேசவில்லை. வழக்கமான போரைப் பற்றிதான் பேசுகிறேன். எனவே, இந்தியர்களைத் தொடர்ந்து சீண்டுவதில் எந்தப் பயனும் இல்லை” என்று கூறியிருந்தார்.
அக்டோபரில் கிரியாகோ தெரிவித்த இந்தக் கருத்து, பாகிஸ்தானியர்களிடையே பெரும் ஆன்லைனில் எதிர்ப்பலையைத் (abuse) தூண்டியது. அதன்பிறகுதான், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரிடம் இருந்து கடிதம் வந்ததாக கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், கிரியாகோவின் கருத்துக்களை “மிகவும் கடுமையாக கண்டிக்கிறோம்” என்றும், “முன்னாள் பிரதமர் (இம்ரான் கான்), கட்சி உறுப்பினர்கள் (பி.டி.ஐ.), மற்றும் பாகிஸ்தான் மக்கள்” ஆகியோரிடம் “உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் கோரப்பட்டிருந்ததாக தெரிவிதிருக்கிறார்.
தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, “வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், ‘குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு’ என்று கூறியபோது, அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான் கானின் அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதன் பெயர் பாகிஸ்தான்… ஏதோ… கட்சி. அவர், நான் இந்தியர்களிடம் சொன்னதை மிகவும் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமரிடமும், கட்சி உறுப்பினர்களிடமும், பாகிஸ்தான் மக்களிடமும் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.” என்று நடந்ததை விளக்கினார்.
மேலும் வழக்கத்துக்கு மாறாக அவர் செய்ததைத் தெரிவித்தார். “என் வழக்கறிஞர், ‘அதை தூக்கி எறிந்துவிடுங்கள், தூக்கி எறிந்துவிடுங்கள்’ என்றார். ஆனால் நான் அதைத் தூக்கி எறியவில்லை. நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், அதில், ‘நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வைத்த கோரிக்கை குறித்து, உங்கள் மன்னிப்புக் கடிதங்களைக் கொண்டு நான் என் *** துடைப்பேன்’ என்று சொன்னேன். நான் ‘send’ பட்டனை அழுத்தி அனுப்பினேன். அதன்பிறகு, அவர்களிடமிருந்து நான் எந்தப் பதிலும் கேட்கவில்லை” என்று நவம்பர் 18 அன்று பதிவேற்றப்பட்ட அந்தப் பாட்காஸ்டில் கிரியாகோ தெரிவித்துள்ளார்.