இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார்களா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய மிக பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது வழக்கமான பாணியில் நேரடியான பதிலை அளித்துள்ளார். “உலக கோப்பை வர இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எனவே, இப்போதே யாருக்கும் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது,” என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
ஒருநாள் தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். ரோகித் சர்மாவும் தனது பேட்டிங்கால் விமர்சகர்களின் வாயை அடைத்தார். இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பிறகும், அடுத்த உலக கோப்பையில் இவர்களின் இடம் குறித்து பயிற்சியாளர் கம்பீர் எந்தவிதமான உறுதியையும் அளிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கம்பீர், “முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 2027 உலக கோப்பை வர இன்னும் நீண்ட நாட்கள் இருக்கின்றன. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதே முக்கியம். ரோகித் மற்றும் கோலி இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆடை மாற்றும் அறையில் அவர்களின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலம். அவர்கள் தொடர்ந்து இதேபோல சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
அதே சமயம், இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் வளர்ச்சியையும் கம்பீர் சுட்டிக்காட்டினார். “ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். உலக கோப்பைக்கு முன்னதாக 20-25 வீரர்கள் கொண்ட ஒரு வலுவான தொகுப்பை உருவாக்க நினைக்கிறோம். இளம் வீரர்களும் எந்த நேரத்திலும் வாய்ப்பு கிடைத்தால் ஆடத் தயாராக இருக்க வேண்டும்,” என்று கம்பீர் வலியுறுத்தினார்.
ரோகித் மற்றும் கோலி
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ரோகித் மற்றும் கோலி கவனம் செலுத்தி வந்தனர். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா சந்தித்த படுதோல்விக்கு பிறகு, இந்த இரு மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இங்கிலாந்து தொடருக்கு முன்பு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடி வருகின்றனர். “உடற்தகுதியும், ரன் குவிக்கும் வேட்கையும் இருந்தால் மட்டுமே 2027 உலக கோப்பையில் ரோகித் – கோலி கூட்டணி களமிறங்கும். இல்லையெனில், இளம் வீரர்களுக்கு வழிவிட நேரிடும்,” என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
About the Author
RK Spark