"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" – எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, “ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராமதாஸ் தான் பாமக, வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசி யாரும் ஏமாறவேண்டாம்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள்

ராமதாஸ் கை காட்டுபவர்களுக்கு 10 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும். அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஏன் துணை போகிறது என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் திணறுகிறது. அன்புமணி தேர்தல் ஆணையத்தை சரிகட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாகிவிட்டது. பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ராமதாஸ் இடமே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.