மாஸ்கோ,
உக்ரைன்-ரஷியா போர் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவி வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கும் அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது.
ஆனால் மிக பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ள ரஷியாவுக்கு அதன் எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான வீரர்கள் இல்லை. எனவே படிப்பு, வேலை நிமித்தம் அங்கு செல்லும் வெளிநாட்டினரை போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள வெளிநாட்டினரை குறிவைத்து சமூகவலைதளம் மூலம் அரசாங்கம் விளம்பரம் அனுப்புகிறது.
இதில் ராணுவத்தில் இணையும் வெளிநாட்டினருக்கு ரஷிய குடியுரிமை, சுமார் ரூ.2½ லட்சம் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஆள்சேர்ப்பை ரஷியா ராணுவம் விரைவுபடுத்தி உள்ளது. ஆனால் இது ஒரு ஏமாற்று வேலை என பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.