சென்னை,
இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் உள்ளது. மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் ஆதார் அட்டையில், ஒவ்வொருவருக்குமான தனி எண் தரப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், பிறந்த தேதி மற்றும் ஆண்டு, முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக பெயரில் தவறு இருந்தால் ஆவணமாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயர் மாற்றத்திற்கு பல்வேறு ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் குறிப்பாக ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.
அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் ‘யுதய்’ புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.