நியூயார்க்,
ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறன்றன. இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர். புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கம்போடியா அதிபர் ஹான் மானெட் வான்வழித் தாக்குதல் நடத்தி தாய்லாந்தை தரைமட்டமாக்குவேன் என நேற்று சூளுரைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பென்சில்வேனியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து பிரச்சினை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அதனை ஒரு போன் காலில் நிறுத்துவதாக தெரிவித்தார். அவர், “கம்போடியா-தாய்லாந்து மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதை அறிவேன்.
அதெல்லாம் ஒருபோன் அழைப்பில் பிரச்சினையை தீர்த்துவிடுவேன். கடந்த 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் போரை நிறுத்திவிட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம். நம்மிடம் உள்ள அதீத சக்தியை (வரிவிதிப்பு) பயன்படுத்தி எதை வேண்டுமானலும் சாதித்துவிடுவேன்” என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக நேற்றோடு 70-வது முறையாக டிரம்ப் கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான பதற்றத்தை நிறுத்தியதில் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் தரப்பினர் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.