இண்டிகோ விமான சேவை பாதிப்பு: 4 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த விமான போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி,

விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை.

குறிப்பாக, குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்தது. இதனால், கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்து வந்தது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டன. தற்போது நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், இண்டிகோ விமான சேவை பாதிப்பு தொடர்பாக 4 அதிகாரிகளை விமான போக்குவரத்து இயக்குனரகம் சஸ்பெண்டு செய்துள்ளது. புதிய விமான விதிகளை இண்டிகோ செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க விமான செயல்பாட்டு ஆய்வாளர்களான 4 அதிகாரிகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நியமித்திருந்தது. இந்த அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறி, லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட காரணமாக அமைந்ததால் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.