பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள்..?

பெங்களூரு,

இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல் – மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பெரும் கூட்டங்களுக்கு பொருத்தமற்றது, பாதுகாப்பற்றது என்று ஆணையம் தெரிவித்தது. இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.