Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

யூதர்களின் விழாவான ஹனுக்கா-வை (Hanukkah) கொண்டாட கடற்கரையில் கூடியிருந்த சுமார் 1,000 முதல் 2,000 பேர் வரையிலான மக்கள் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகவும், இன்னொரு நபர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபக்கம் இந்த சம்பவத்தில்,மர்ம நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை ஒருவர் பிடிங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “பான்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வேதனையளிக்கிறது.

காவல்துறையினரும், அவசரகாலப் பணியாளர்களும் மக்களைக் காப்பாற்ற களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதேவேளையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்தத் தாக்குதல் குறித்து, “ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பான்டி கடற்கரையில் ஹனுக்காவின் மெழுகுவர்த்தியை ஏற்றச் சென்ற யூதர்கள், நமது சகோதர சகோதரிகள் இழிவான தீவிரவாதிகளால் மிகவும் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்தத் தருணத்தில் இஸ்ரேலின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜெருசலேமிலிருந்து எங்களின் ஆதரவை நாங்கள் அனுப்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.