சண்டிகர்,
டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரியானாவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பயங்கர சாலைவிபத்து ஏற்பட்டது.
கடும் பனிமூட்டம், வெளிச்சமின்மையால் அரியானாவின் நூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 20க்கும் மேற்பட்ட கார்கள் , பிற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.