லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜோதி, ரிஷப் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. திருமணம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூடுதல் வரதட்சணை தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று மணமகனும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். அதன்படி, கூடுதலாக ரூ. 20 லட்சம் பணமும், சொகுசு காரும் வரதட்சணையாக கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். கூடுதல் வரதட்சணை தரவில்லையென்றால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த மணப்பெண் ஜோதி மணமகன் ரிஷப்பை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். ரிஷப் தனது குடும்ப உறுப்பினர்களை அவமதிப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும் கூறி ஜோதி திருமணத்தை நிறுத்தினார். திருமணத்திற்கு சில மணிநேரம் இருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது