தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசர்குளத்தில் உள்ள தனியார் ஹாலோபிளாக் கம்பெனியில் 15 நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
நெல்லையில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் என்பவர் ஹாலோபிளாக் கம்பெனி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு இவர்களை வேலைக்குச் சேர்த்துள்ளார்.
ஆனால் அந்த கம்பெனியில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் இருவரும் வேலையிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.

பின்னர், இருவரும் கேரள மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், அரசர்குளத்திலேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச வேண்டும் என கூறி, அவர் பைக்கில் அசாமைச் சேர்ந்த 2 இளம்சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார்.
ஆட்டோ அங்கு வந்ததும், ஹாலோபிளாக் கம்பெனியில் இருவரும் பணத்தை திருடி விட்டதாகக் கூறி, அவர்களை இறக்கி விடுங்கள் என முகமது மஹ்புல் ஹூசைன் ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.
அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இருவரையும் அழைத்து சென்று கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை கட்டிப்போட்டு, அவரது கண் எதிரிலேயே மனைவியை 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இருவரையும் மெயின் ரோட்டில் விட்டுவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட அந்த பெண் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 2 இளம் சிறார்களை கைது செய்தனர். கணவரின் கண் முன்னே நடந்த இந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.