சுமார் பத்து வருடங்களுக்கு முன் டப்பிங் யூனியனிலிருந்து உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தாசரதி நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, தன்னை நீக்கியது சட்ட விரோதம் என்கிற தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்
தாசரதியிடம் பேசினோம்.

”எனக்கு தெரிய பெப்சியில அங்கம் வகிக்கிற எல்லா கிராஃப்ட்டும் சேர்த்து ஒரு வழக்கை முழுசா நடத்தி முடிச்சு தீர்ப்பு வந்திருப்பது இப்பதான்னு நினைக்கிறேன். வாங்குகிற சம்பளத்தில் பத்து சதவிகிதம் சங்கத்துக்குச் செலுத்தவேண்டும்’ என்கிற மாதிரியான அநியாய நிபந்தனைகளை கடைபிடித்து வந்ததை எதிர்த்துக் கேள்வி கேட்டேன். அதேபோல சங்க வரவு செலவு இன்னும் சில விஷயங்கள் குறித்தும் கேட்டதற்காக சங்கத்துல இருந்து நீக்கினாங்க.
முன்னதா விளக்கம் கேட்க ஆஜராகச் சொல்லிட்டு, நாம போனா அவங்க வரமாட்டாங்க. அதனால வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கு நடந்துக்கிட்டிருந்த போதே ‘ராதாரவி சார் கிட்ட போய் மன்னிப்பு கேட்டா, பிரச்னை முடிஞ்சிடும்’னு சொன்னாங்க. எனக்கு அவசியமில்லைனு சொல்லிட்டு வழக்கை நடத்தினேன்.
அந்த வழக்குலதான் இப்ப தீர்ப்பு வந்திருக்கு. என்னைத் தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதம்னு நீதிபதியே தீர்ப்பை வாசிச்சிருக்கார்.
அதனால இனி மேல் டப்பிங் யூனியனில் நான் உறுப்பினர். சங்க நடவடிக்கைகளில் நான் ஈடுபடறதை யாராலும் தடுக்க முடியாது” என்றார் இவர்.

தாசரதி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு மட்டுமே பொருந்துமா அல்லது இதற்கு முன் நீக்கப்பட்ட பாடகி சின்மயி, தற்போது தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கும் ராஜேந்திரன் ஆகியோருக்கும் பொருந்துமா என்பது குறித்து உறுப்பினர்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம்.
”இன்றைய தேதியில் சுமார் பத்து பேருக்கு மேல் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்காங்க. தாசரதி தொடுத்த வழக்கில் கிடைத்த தீர்ப்புங்கிறதால அவர் விஷயத்தில் தெளிவான முடிவு கிடைச்சிருக்கு.

அதேநேரம் ராஜேந்திரன் மற்றும் வேறு சிலருமே தாசரதி கேட்ட அதே கேள்விகளைத்தான் சங்க நிர்வாகிகள்கிட்ட கேட்டாங்க. அதனால அவங்க விஷயத்துலயும் சங்கம் தானா முன் வந்து நடவடிக்கைகளை கைவிட்டா நல்லா இருக்கும். இல்லாட்டி இவங்களும் நீதிமன்றம் போனா, திரும்பவும் சங்கம் அசிங்கப்பட வேண்டியதுதான் வரும்’ என்கிறார்கள் இவர்கள்.