மக்களவையில் மசோதா நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி,

புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் கடந்த இரண்டு நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை விவாதத்தின் போது பதிவிட்டனர்.இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பக் கோரியும், மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

சில எம்பிக்கள் மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்த நிலையில், “மக்கள் உங்களை மசோதாக்களைக் கிழிப்பதற்காக அனுப்பவில்லை, உங்களின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, நாள் முழுவதும் மக்களவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.