திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் – முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒன்றில் பா.ஜ.க-வும், மற்றொன்றில் சி.பி.எம் கட்சியும் வென்றன. தலைநகர் மாநகராட்சியான திருவனந்தபுரத்தில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 100 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 50 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. சி.பி.எம் கூட்டணி 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21-ம் தேதி பதவி ஏற்றனர். இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வி.வி.ராஜேஷ் மேயராக தேர்வானார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராக பதவி ஏற்ற வி.வி.ராஜேஷ் மற்றும்  துணை மேயராக பதவி ஏற்ற ஆஷா நாத் ஆகியோருக்கு மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி-யும், கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா தேர்தலில் போட்டியிடும்போதே பா.ஜ.க-வின் மேயர் வேட்பாளராக முன்னிலைபடுத்தப்பட்டார். அவர் வென்றதும் திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின. அதே சமயம் அவர் பா.ஜ.க-வில் சமீபத்தில்தான் இணைந்தார் என்பதாலும்… அரசியல் அனுபவம், சீனியாரிட்டி அடிப்படையில் மேயரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க தலைமையும், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் வலியுறுத்தியதாலும், சீனியர் நிர்வாகியான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தார்.

திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்

இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வி.வி.ராஜேஷ், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சபரிநாதன், சி.பி.எம் கூட்டணி சார்பில் சிவாஜி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க-வின் 50 வாக்குகள் மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலரின் வாக்குகளையும் சேர்த்து 51 வாக்குகள் பெற்று வி.வி.ராஜேஷ் வெற்றிபெற்றார். சி.பி.எம் வேட்பாளர் 29 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 17 வாக்குகளும் பெற்றனர். இதற்கிடையே பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சிக்காக பலியானவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும், அவர்களின் பதவி பிரமாணம் சட்டப்படி செல்லாது என அறிவித்துவிட்டு பிற கவுன்சிலர்களைக் கொண்டு மேயர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சி.பி.எம் கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.