இஸ்ரேல் தாக்குதலில் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் பலி – ஒப்புக்கொண்ட ஹமாஸ்

காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தித்தொடர்பாளராக அபு ஒபிடா என்பவர் செயல்பட்டு வந்தார். உலகின் பல்வேறு நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அபு ஒபிடாவையும் பயங்கரவாதியாக அறிவித்தது. ஹமாஸ் தொடர்பான முடிவுகள் அனைத்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளராக இருந்த அபு ஒபிடா வீடியோ வடிவில் வெளியிட்டு வந்தார். அபு ஒபிடாவின் முகம் துணியால் மறைக்கப்பட்டு இருக்கும். கடந்த 20 ஆண்டுகளாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டு வந்த அவரின் முகம் துணியால் மறைக்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டு வந்தது.

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் அபு ஒபிடாவை கொன்றுவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், அபு ஒபிடா உயிரிழப்பு தொடர்பாக ஹமாஸ் ஆயுதக்குழு எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட்டில் இஸ்ரேல் தாக்குதலில் செய்தித்தொடர்பாளர் அபு ஒபிடா உயிரிழந்துவிட்டதாக பல மாதங்கள் கழித்து ஹமாஸ் ஆயுதக்குழு இன்று ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அபு ஒபிடாவின் உண்மையான பெயர் ஹுஹைபா சமீர் அப்துல்லா அல் ஹலோட் என்று கூறியுள்ள ஹமாஸ், அபு ஒபிடாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் மே மாதம் ஆயுதக்குழுவின் தளபதி முகமது சின்வர், காசா முனையின் ரபா நகர் பிரிவு தளபதி முகமது ஷபனா, ஜுன் மாதம் மூத்த தளபதி ஹகீம் அல் இசா ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அபு ஒபிடா கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய செய்தித்தொடர்பாளரையும் ஹமாஸ் அறிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.