Doctor Vikatan: குளிர்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று எனக்கு சிறு வயது முதல் சொல்லப்பட்டதால் நானும் இத்தனை வருடங்களாக அதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை, பழங்களால் ஒன்றும் ஆகாது என ஒரு சாரார் சொல்வதையும் கேட்கிறேன். இந்த இரண்டில் எது தான் உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது தவறான கருத்து. உண்மையில், பழங்களில் உள்ள வைட்டமின்-C (Vitamin-C) நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கவே உதவுகிறது. இருப்பினும், சிலருக்கு குறிப்பிட்ட பழங்கள் ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தி, உடல்நலத்தில் சில மாற்றங்களை உருவாக்கலாம்.
ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலில் கோழையை (Phlegm) அதிகப்படுத்தலாம். சிலருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது தொண்டையில் சளி கட்டுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் தற்காலிகமாக அதைத் தவிர்க்கலாம். சளித்தொந்தரவு இருப்பவர்கள் மலை வாழைப்பழம், செவ்வாழை அல்லது நேந்திரம் பழம் போன்றவற்றை முயற்சி செய்யலாம்; இவை பொதுவாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

பழங்களை நல்ல வெயில் இருக்கும் பகல் நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது போல் தோன்றினால், நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்த ஜில்லிப்பான பழங்களையோ அல்லது வெட்டி வைத்த பழைய பழங்களையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை தொண்டையில் அலர்ஜியை ஏற்படுத்தி சளியை உருவாக்கும். பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், உங்கள் உடலுக்கு எந்தப் பழம் ஏற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.