சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர்.
தற்போது ‘பராசக்தி’ திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள்.
இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு.
பிறகு, ‘ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும்.
அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்’னு சுதா மேம் சொன்னாங்க.
என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க” என்றார்.

அதர்வா கூறுகையில், “எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது.
இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம்” எனப் பேசியிருக்கிறார்.