திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தேர்வானவர்கள் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.